வாகனம் வாங்குவது தான் அனைவரின் முக்கிய லட்சியமாக இருக்கும். இளைஞர்களுக்கு டூவீலர் வாங்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். பெரியவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும்.
அதே போல, வாகனம் வாங்கி அதனை இன்சூரன்ஸ் செய்யும் பழக்கமும் தவறாமல் இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை இன்சூரன்ஸ் கட்டி வருகின்றனர். இது தற்போது கட்டாய சட்டமாகவும் உள்ளது. இந்த இன்சூரன்ஸ்/ காப்பீடில் விபத்துக்காப்பீடு, உள்ளிட்ட அனைத்து காப்பீடுகளும் அடங்கும்.
நீங்கள் பாதுகாப்பாக பார்த்து வரும் வாகனம் திடீரென காணாமல் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?? அதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள கீழே தொடரவும்.
வாகனம் தொலைந்துபோனால் அது குறித்து உடனடியாக இன்சூரன்ஸ் செய்த நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் காவல்துறையில் புகார் பதிவு செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் உங்களுக்குத் தெரிவிப்பர். இது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்வர்.
முதலில் வாகனம் ஒட்டு மொத்தமாக இன்சூரன்ஸ் செய்யப் பட்டுள்ளதா என்பது பரிசீலிக் கப்படும். அதாவது வாகனம் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயப்படும். அதாவது விபத்தில் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு, தீ விபத்து அல்லது வாகனம் தொலைந்து போவது, இயற்கை சீற்றங்களால் வாகனத்துக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு அளிக்க வகை செய்வதாகும்.
இன்சூரன்ஸ் செய்தவர் வாகனம் தொலைந்தது தொடர்பாக காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நகலை உடனடியாகப் பெற வேண்டும்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி இழப்பீட்டு விண்ணப்பத்தைக் கேட்டுப் பெற்று அதை பூர்த்திசெய்ய வேண்டும். அதில் வாகனக் இன்சூரன்ஸ் எண், வாகனம் பற்றிய விவரம், வாகனம் தொலைந்துபோன நேரம், தேதி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். வேறு காரணங்களுக்காக இழப்பீடு கோரினாலும் அந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.
முதலில் பூர்த்தி செய்த இழப்பீடு விண்ணப்பத்தில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு அத்துடன் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்சி) நகல், வாகன ஓட்டுனர் உரிமத்தின் நகல், இன்சூரன்ஸ் ஆவணத்தின் முதல் இரண்டு பக்கங்களின் நகல், காவல்துறை அளித்த எப்ஐஆர் மற்றும் வாகனம் திருட்டு போனது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ-வுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
காவல்துறை வாகனத்தை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் அளித்த பிறகு வாகனத்துக்கு இழப்பீட்டு தொகை அளிக்கும் பணியை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்கும்.
காணாமல் போன வாகனத்தின் ஆர்சி-யில் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும்.
பின்னர் வாகனத்தின் டூப்ளிகேட் சாவி, வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.
வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகை, வாகனத்தின் மதிப்பை கணக்கிட்டு அதனடிப்படையில் மதிப்பீட்டாளர் இழப்பீட்டு தொகையை நிர்ணயிப்பார்.
இதையடுத்து அடுத்த 7 அலுவல் நாள்களில் இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்.
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
வாகனத்துக்கு டூப்ளிகேட் ஆர்சி புத்தகத்தை சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து உடனடியாகப் பெற வேண்டும்.
வாகனம் வங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்டிருந்தால், இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்குத்தான் அளிக்கப்படும். இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக கடன் செலுத்த வேண்டியிருந்தால் அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்தான் செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment