Monday, 2 March 2015

த்ரிஷா, அஞ்சலியால் பூகம்பம் வெடிக்கிறது, அனல் பறக்கிறது..!


சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, சூரி உட்பட பலர் நடித்து வரும் படம் ‘அப்பாடக்கர்’.நீண்ட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்து வருகிறது. இப்படம் குறித்து சில சிறப்பு அம்சங்கள் இருக்கிறது.
அதாவது ஜெயம் ரவி நடிக்கும் முதல் முழுநீள காமெடி படம், அஞ்சலிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் படம், திருமணம் நெருங்கும் நேரத்தில் த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம், அலெக்ஸ் பாண்டியன் தோல்விக்கு பிறகு சுராஜ் எடுக்கும் படம் என படத்துக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை என்று ஒரு கதை வெளிவந்துள்ளது...
பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் சுற்றித் திரிகிறவர் ஜெயம்ரவி, அவரது நண்பர்தான் சூரி. எந்த பிரச்னையிலும் இருந்து ஈசியாக தப்பித்து வருகிறவர்களை "அவன் பெரிய அப்பாடக்கருப்பா" என்பார்கள். அப்படி ஒரு கேரக்டர்தான் ஜெயம்ரவி. உள்ளூர் பெண் அஞ்சலியை ஜாலிக்காக காதலிப்பார். அதாவது டைம் பாசுக்கு.
ஆனால் அஞ்சலியோ உண்மையாக தீவிரமாக காதலிப்பார். ரவியின் ஜாலியான காதலுக்கும், அஞ்சலியின் தீவிரமான காதலுக்கு இடையில் கிடந்து அல்லாடுவார் சூரி. அஞ்சலி துடுக்குத்தனமான வாயாடி பொண்ணு. நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டார். ஒரு கட்டத்தில் அஞ்சலி தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி ரவியை மிரட்ட, தப்பித்து சென்னைக்கு வருகிறார் ஜெயம்ரவி. சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு த்ரிஷா மீது நிஜமான காதல் வருகிறது.
த்ரிஷாவுக்கு ஜெயம்ரவி மீது காதல் இருந்தாலும் அவரது அப்பாடக்கர் கேரக்டரை மாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிராமத்துக்கு திரும்புகிறார்கள். அஞ்சலி விளையாட்டுத்தனமான பொண்ணு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டு இருக்கும்னு நம்பி வருகிறவருக்கு ஷாக்.
அஞ்சலி காதல் இன்னும் தீவிரமாகி ரவிக்காக காத்திருக்கிறார். அஞ்சலியும், த்ரிஷாவும் சந்திக்கிறார்கள். பூகம்பம் வெடிக்கிறது, அனல் பறக்கிறது. இருவராலும் சூரி பந்தாடப்படுகிறார். இறுதியில் ஜெயம்ரவி யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் கதை.

No comments:

Post a Comment