Sunday, 1 March 2015

அவர் இல்லனா நான் இல்ல...கமல் உருக்கம்..


கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’உத்தம வில்லன்’. கமலின் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் கமல், ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திர கதாபாத்திரத்திலும் நாடித்துள்ளார்.
ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர், ஏராளமான திரையுல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார். படத்தின் பாடல்களை கமல்ஹாசன் பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் பேஸ்டைம் தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றி உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது, இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.
என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு. 'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன்.
பார்த்திபன் பேசும் போது சொன்னார், கே.பி.சாரின் பாதிதான் கமல் என்று. அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன். கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன். ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.
ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன். இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment