நெஸ்லே நிறுவனத்திற்கு இது போதாத காலம் போல், பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஏற்கனவே நெஸ்லே தயாரிப்பான, Maggi நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக லெட் இருப்பதாக கூறி பல மாநிலங்களில் தடை செய்துள்ளனர். மேலும், பல மாநிலங்களில் தடை செய்வது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்ட பின் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், கோவை அருகே உள்ள பிரேம் ஆனந்த் என்பவர் நெஸ்லேயின் மற்றொரு தயாரிப்பான ‘NAN PRO’ பால் பவுடர் காலாவதி ஆவதற்கு முன்பாகவே கெட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
பிரேம் ஆனந்த் தனது குழந்தைக்கு ‘NAN PRO 3’ என்ற பால் பவுடரை வாங்கியுள்ளார். இதனை அருந்திய குழந்தைக்கு இரண்டு நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை கவனித்த ஆனந்த் பால் பவுடரில் புழுக்கள் இருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்: பாலில் சோப்பு தூள் கலக்கப்படுகிறது!!? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது புகார் தெரிவித்த பிரேம் ஆனந்த், தன்னிடம் மீதி இருந்த நெஸ்லே பால் பவுடரை கோவையில் உள்ள உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தார். அப்போது அந்த பால் பவுடரில் உயிருடன் 28 புழுக்கள், 22 சிறு வண்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் புகார் செய்தார். மேலும் தன்னிடமிருந்த பால்பவுடரையும் அவர் கொடுத்தார். இந்தச் சோதனை அறிக்கையில் அந்தப் பால் பவுடர் அருந்தத் தகுதியற்றது எனத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.கதிரவனிடம் பிரேம் ஆனந்த் எழுத்துப்பூர்வமாக கடந்த திங்கள்கிழமை புகார் தெரிவித்தார். இந்தப் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு உணவுக் கட்டுப்பாட்டு ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோவை மாநகரில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நெஸ்லே நிறுவனத்தின் "நான்ப்ரோ 3' பால் பவுடரை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்தனர். இந்தப் பால் பவுடர்கள் அனைத்தும் உணவுப் பகுப்பாய்வு மையத்துக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்: பிறந்த 10 நாளில் முட்டையிட்ட கோழி குஞ்சு!!! அங்கயுமா??
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர்.கதிரவன் கூறுகையில், "இந்தப் பால் பவுடர் தொடர்பான விசாரணை அறிக்கை 14 நாள்களில் கிடைக்கப்பெறும். இந்த விசாரணை அறிக்கையில் அந்தப் பால் பவுடர் உட்கொள்ளத் தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான Maggi நூடுல்ஸில் ‘மோனோ சோடியம் குளுடாமேட்' என்ற ரசாயனம் அதிக அளவில் கலந்துள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், அதே நெஸ்லே நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ‘NAN PRO 3' பால் பவுடரில் புழுக்கள், வண்டுகள் கிடந்த விவகாரம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment