விஜய் டி.வி, வழங்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வெற்றார் கர்நாடகாவை சேர்ந்த ஸ்பூர்த்தி. 9 வயதிலேயே இவரது திறமை எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ன் இறுதிச்சுற்று நேற்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர்கள் சங்கர் மகாதேவன், மனோ, சித்ரா, சுபா, மாணிக்க விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கே.வி.ஆனந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் முதல் ஆறு இடங்களை பிடித்த பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. அவர்களுக்கு ஒன்றரை கோடி பார்வையாளர்கள் வாக்களித்தனர். இந்த ஆறு பேரில் முதல் மூன்று இடங்களை ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, ஜெசிக்கா ஆகியோர் பிடித்தனர்.
இதனால் போட்டியில் இருந்து வெளியேறிய பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா ஆகியோருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து ஸ்பூர்த்தி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவர் இந்த போட்டியின் மூலம் பெற்ற 1கிலோ தங்க பரிசை, இந்தியாவில் உள்ள அனாதை குழந்தைகள் இல்லம் ஒன்றுக்கு பாதியையும், மீதியை இலங்கையில், தமிழர்கள் வாழும் அனாதை இல்லத்திற்கு வழங்குவதாகவும் ஜெசிகாவின் தந்தை கூறினார். இது ஜெசிகாவே எடுத்த முடிவு என்று அவரது தந்தை கூறினார். இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் மூன்றாவது இடத்தை ஹரிப்ரியா பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment