Monday, 1 June 2015

ஜெ., விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு: கர்நாடகா அதிரடி முடிவு!!


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் கூடியது. இக்கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சித்தாராமைய்யா தலைமை வகித்தார். இதில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் விடுதலையானதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த வருடம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தரப்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கடந்த மாதம் (மே 11)-ல் அவர் குற்றவாளி அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் பல எதிர்கட்சியினர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கர்நாடக அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை பலரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால், எப்போது மேல் முறையீடு செய்யப்படும் என்பது குறித்து கர்நாடக அரசு சார்பில் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment