Friday, 24 April 2015

இன்றைய தினம்…!!(ஏப்ரல் 25)


ஏப்ரல் 25
மார்க்கோனி பிறந்த தினம்!!!
வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்தவர் மார்கோனி. 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் அவர் 1874-ம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார். அவரது இயற்பெயர் குலீல்மோ மார்க்கோனி.
தந்தை தனவந்தர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி கிடைத்தது. வீட்டிலேயே தந்தை உருவாக்கி வைத்திருந்த நூலகம், அவரின் பார்வையை விசாலப்படுத்தின. சிறு வயதிலேயே மார்கோனிக்கு மின்சக்தி ஆய்விலும், இயற்பியலிலும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. எனவே வீட்டுப் பரணில் சிறு ஆய்வுக் கூடத்தை நிறுவி ஆய்வுகளை மேற்கொண்டார்.
தமது 20-ம் வயதில், கம்பியில்லாமல் ஒலி அலைகளை அனுப்பும் ஆய்வு குறித்து படிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அது அவருக்கு உந்துதலாக இருக்கவே, அதைப்பற்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் பயனாக, ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தியை அதாவது டெலிகிராப் அனுப்பும் முறையை உருவாக்கினார். அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி.
இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி. 1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார் மார்கோனி. 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார்.
அவர் உருவாக்கிய கருவிகள் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது.
1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது.
ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வானொலி என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் தமது 63-ம் வயதில் ரோம் நகரில் காலமானார்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1945 – இத்தாலி நாசியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1974 - போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
வரலாற்றில் சிறப்பு நாள்:
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் முதலாம் உலகப்போரில் கலந்து கொண்ட மற்று உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாகக் கொண்டாடப்படும் ஆன்சாக் தினம்.

No comments:

Post a Comment