Tuesday 28 April 2015

ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக மீண்டும் பி.வி ஆச்சார்யா!!


ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக பவானி சிங்கிற்கு பதிலாக மீண்டும் பி.வி ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பெங்களூரு தனிக்கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட போது அரசு சிறப்பு வக்கீலாக பி.வி ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். ஆனால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் அவர். அதன் பிறகு அவருக்குப் பதிலாக பவானி சிங் நியமிக்கப்பட்டார்.
பெங்களூரு தனிக்கோர்ட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் தண்டனை வழங்கி செப்., 27-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பெங்களூரு ஐகோர்ட்டில் நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் மேல்முறையீடு வழக்கில் பவானி சிங் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தார். இதன்படி பவானிசிங் இந்த வழக்கில் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டது தவறு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதன் பின்னர், மீண்டும் அரசு சிறப்பு வக்கீலாக, பி.வி.ஆச்சார்யாவையும், உதவி வக்கீலாக சந்தோஷ் சவுட்டாவும் கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆச்சார்யா தனது எழுத்துப்பூர்வமான வாதத்தினை நேற்று ஐகோர்ட்டில் சமர்ப்பித்தார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ’சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி கர்நாடகாவில் விசாரணை நடைபெறும் போது அந்த மாநில அரசும் ஒரு வாதியாக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அவர்கள் சேர்க்காதது சட்டவிரோதமானது. அது மட்டுமின்றி இந்த வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளது ஆதாரப்பூர்வமாக கீழ்கோர்ட்டில் ஏற்கனவே நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனவே கீழ்க்கோர்ட்டு தீர்ப்பினை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment