Monday 27 April 2015

நேபாள பூகம்பம்… விஞ்ஞானம் என்ன சொல்கிறது…!


இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பூகம்பம்தானா இது என்று ஆராயப்பட்டு வருகிறது.
இந்திய- - யூரேசிய கண்டத் தட்டுகள் (டெக்டானிக் பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்கு காரணமாகும் ஒரு முக்கிய ஃபால்ட் நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வரலாற்று சாட்சியங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பெரிய பூகம்பங்களுக்கு இந்த ஃபால்ட் பகுதி முக்கிய காரணமாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் 2012-இல் நேச்சர் ஜியோ சயன்ஸ் இதழில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமாலயத்தில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இமாலயத்தில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல பூகம்பங்கள் நிகழ்வதுண்டு.
உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில் 1255 மற்றும் 1934ஆம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய பூகம்பங்கள் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1934-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக பூமி சுமார் 150கிமீ தூரம் வரை பிளவு கண்டதாம்.
மேற்புறத்தை பிளவுறுத்தும் இத்தகைய நிலநடுக்கங்கள் தவிர "பிளைண்ட் த்ரஸ்ட்" என்று அழைக்கப்படும் கண்களுக்குப் புலப்படா பூகம்பங்களும் இமாலயத்தில் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இமாலயத்தில் சாத்தியமாகக்கூடிய மிகப்பெரிய பூகம்பங்களில் இது ஆரம்பமா அல்லது முடிவா அல்லது இது தொடர்கதையா என்ற கேள்வி தற்போது ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment