Wednesday 29 April 2015

அந்த 2 படமும் ராஜபக்சே பணத்தில் உருவானதுதான்.. ராஜ்கிரண் அதிரடி பேச்சு


புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் , முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “ சிவப்பு”.
நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடிப்பில் கழுகு சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகி விட்டாராம் . “மஞ்சப்பை” படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி “சிவப்பு” படம் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண்.
இலங்கைத் தமிழர், குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறுகையில், "ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை. சமீபத்தில் வெளியான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்ப் படங்களும்கூட சிங்கள சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
அவை ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்கள் அல்ல. இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் உணரவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்திய மக்களைப் போன்ற வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசு, ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு மட்டும் அந்த சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது. அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது.
ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது. காரணம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும், அதை முழு மூச்சாகப் பின்பற்றும் திரைப்பட தணிக்கைக் குழுவும் அதை அனுமதிக்காது. எனவேதான் இயக்குநர் சத்யசிவா, இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கிறார். இதனால்தான் படத்திற்கு ஒரு வெட்டுகூட சொல்லாமல் ‘யு' சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு," என்றார்.

No comments:

Post a Comment