Tuesday 28 April 2015

8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய இந்தோனேஷிய அரசாங்கம்…!


மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 கைதிகளின் மரண தண்டனையை இந்தோனேஷிய அரசாங்கம் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 12.25 மணிக்கு நிறைவேற்றியுள்ளது.
மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி சூட்டுகளைத் தீர்த்ததன் மூலம் எட்டு பேரினதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா, பிறேசில், நைஜீரியா ஆகிய நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் ஆஸ்திரேலியாவிலும் வாழும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட மயூரன் சுகுமாரனும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட முன்னர், மயூரனும், சானும் இறுதிக்கோரிகையை விடுத்தனர். தமது உடல்கள் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்கள். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசாங்கம் இணங்கியதாக இந்தோனேஷிய சட்டமா அதிபர் அலுவலகத்தின் பேச்சாளர் ரோனி ஸ்பொன்டானா தெரிவித்தார்.
குறித்த எட்டுப் பேரின் மரண தண்டனையை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும், அதனை கருதிற்கொள்ளாத இந்தோனேஷிய அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment