Sunday 26 April 2015

நேபாள பாரம்பரிய சின்னமான 9 அடுக்கு தராஹரா கோபுரம் தரைமட்டம்…!


நேபாள நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியச் சின்னமான 9 அடுக்குகள் கொண்ட தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரை மட்டமானது பேரிழப்பாகும். நூற்றாண்டுக் கணக்கில் பழைமையான கோயில்கள் பல இடிந்து விழுந்தன. குறிப்பாக யுனெஸ்கோ அங்கீகரித்த வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான 9 அடுக்குகள் கொண்ட தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரைமட்டமானது.
இந்த இடிபாடுகளுக்கு அடியிலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோபுரம் 1832-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பார்வையாளர்களுக்கு இது திறந்து விடப்பட்டது. 8-ஆவது தளத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியும் இதில் செய்யப்பட்டிருந்தது. இந்த கோர விபத்துக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன.
நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சுமார் 1800இற்கும் அதிகமானவர்கள் பலியானதற்கு, அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ள ஐ.நா. அமைப்பு, மீட்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நேபாளத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதனிடையே, நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக, பேரிடர் மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ள அமெரிக்கா, நேபாளத்தின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய முதற்கட்டமாக 10 லட்சம் டாலர்கள் நிதியுதவி வழங்கவும் முன்வந்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கும், இந்தியாவுக்கும் அனைத்து உதவிகளையும் அளிக்க தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். நேபாளத்துக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக இலங்கை அரசும் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, இலங்கையிலிருந்து 8 மருத்துவர்கள், நிவாரணப் பொருட்க ளுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேபாளத்துக்கு உதவ பிரான்ஸும் முன்வந்துள்ளது.

No comments:

Post a Comment