Thursday 28 May 2015

இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் தொல்லை.. எந்த ஆதாரமும் இல்லை..


கடந்த 2014ம் ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில், பெயர் வெளியிடப்படாத இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர், அணியில் தொடர்ந்து நீடிக்க அதிகாரிகள் பாலியல் ரீதியில் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், இது குறித்து முறையான விசாரணை செய்ய இலங்கையின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்ஸநாயக்க தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழு, கடந்த 6 மாதங்களாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த புதன் கிழமை, இந்த விசாரணை தொடர்பான அறிக்கை, இலங்கை விளையாட்டுத் துறையிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த விசாரணை படி, 3 அதிகாரிகள் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்நிலையில், இது குறித்து கடந்த வெள்ளிக் கிழமை பேசிய இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர், “இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனைகள், கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான சாட்சிகள் கிடைத்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீராங்கனைகளுக்கு 3 அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்கள் மீது எந்தவித கிரிமினல் வழக்கும் போடப்படவில்லை.
அதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்கள் தற்போது அந்த பதவியிலும் நீடிக்கவில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment