Thursday 28 May 2015

அமிதாப் பச்சனை கண்ணீர் விட வைத்த கங்கனா ரணாவத்


தமிழில் ஜெயம் ரவியுடன் ’தாம்தூம்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் பாலிவுட்டில் தன் நடிப்பாலும், கவர்ச்சியாலும் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிவருகிறார். இயக்குநர் அனுராக் காஷ்யப் தயாரித்த ‘குயின்' படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகினர் பலரின் பாராட்டை பெற்றதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.
தற்போது அவருடைய நடிப்பில் ’தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்' படம் வெளிவந்துள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரணாவத் ஜோடியாக மாதவன் நடித்துள்ளார். கடந்த 21ஆம் தேதி வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வசூலையும் குவித்து வருகிறது. 5 நாட்களில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது இப்படம்.
இந்த படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் கங்கனாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஏற்கனவே 2 தேசிய விருது வாங்கியுள்ள கங்கனாவுக்கு மூன்றாவது விருது கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த அமிதாப் பச்சன் கங்கனாவின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டார்.
இதையடுத்து அவர் கங்கனாவை பாராட்டி இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். படத்தில் வரும் கங்கனாவின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை போட்டு கடிதம் எழுதியுள்ளார். படத்தை பார்த்து நான் மிகவும் அரிதாக தான் அழுவேன். உங்களின் நடிப்பை பார்த்து என் கண்களில் தானாக கண்ணீர் வந்தது.
கங்கனா இருக்கும் சினிமா துறையில் நான் இருக்கிறேன் என்று நினைக்கையில் நான் பாக்கியசாலி தான் என்று அமிதாப் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் போன்ற ஜாம்பவான் என்னை பாராட்டி இரண்டு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளார். அவற்றை நான் ஃபிரேம் செய்து வீட்டில் மாட்டப் போகிறேன். என்னைப் பொறுத்த வரை அவை இரண்டும் கடிதங்கள் அல்ல பதக்கங்கள் என்கிறார் கங்கனா.

No comments:

Post a Comment